Skip to main content

இஃதறிந்தாள் சீறாளோ - கோமான் வெங்கடாச்சாரி

தந்தை தாய் வாக்கிய பரிபாலனம் செய்யும் பொருட்டு தனக்கென தன் தந்தையால் அளிக்கப்பட்ட தரணியைத் தன் தம்பிக்காக விட்டு விட்டுத் தம்பி இலக்குவனுடனும் தன்னுயிர் போன்ற தகைசால் பத்தினி சானகியுடனும் சித்திரக்கூடத்திலிருந்து புறப்பட்ட தயரத குமாரனாகிய இராமன் தாபம் மிகுந்த கானகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் முதன்முதலாக எதிர்ப்பட்டவன் விராதன்.
விராதன் ஓர் இயக்கன். அவனது காம உணர்ச்சியினால் ஏற்பட்ட அறிவீனத்தால் அரக்கனாக பிறக்கும்படி சாபம் பெற்றவன். பின்னர் நிகழவிருக்கும் இராவண வதத்திற்கு சூர்ப்பனகை எவ்வாறு மூலகாரணமாக வந்தமைந்தாளோ அதேபோல் அரக்கர் குல அழிவிற்கு அடிகோலுபவனாக வந்தமைகிறான் விராதன் என்று கூறலாம்.
விராதன் இராம இலக்குவர்களைத் தன் வலிய திரண்ட தோள்களில் ஏற்றிக்கொண்டு ஆகாயமார்க்கத்தில் செல்வதைக் கண்ட சனககுமாரி சஞ்சலமுற்றுக்கதறியழ, அதுகண்ட இலக்குவனன் தன் அண்ணணாகிய இராமனிடம் சீதையின் துயரைச்சொல்லி விளையாடியது போதும், இனியும் விளையாடவேண்டாம் என்று வேண்டுகிறான். வினைவிளைகாலம் வந்ததையறிந்து கொண்ட அண்ணல் தன் திருவடியால் விராதனை அழுத்த அவனும் பேரிடியால் தாக்குண்ட பெருமலைபோல் தரையில் வீழ்கிறான்.
அவ்வாறு வீழ்ந்த விராதன் தன் பழவினைப் பயனால் இதுகாறும் எய்திருந்த அரக்கநிலை நீங்கி இயக்க நிலையடைந்து இராமனைப் பலவாறு புகழ்கிறான், துதிக்கிறான். அவனே பரம்பொருள் என்கிறான். அன்று யானைக்கு அபயமளித்துக் காத்த ஆதிமூலப் பொருளும் அவனே என்கிறான்.
எல்லாம் சரிதான். அவ்வாறு உய்த்துணர்ந்து உரையாற்றிவந்த விராதன் நடுவே ஓர் ஐயத்தையும் உருவாக்கிவிடுகிறான் இராமன் மனதில். ஆனால் அவன் அண்ணலிடம் கேட்ட சந்தேகங்களுக்கு இராமனே தகுந்த சமாதானம் கூறியிருக்கமுடியுமா? முடியாதுதான். அவைதான் என்ன? நாமும் அறியலாமே?
இராமா ! நீ பரம்போருள். ஆதிமூர்த்தி நீதான். யாவற்றினும் உறைகிறாய். உனக்கு இருவர் மடந்தையர். ஒருத்தி சீர்பூத்த செழுங்கமலத் திருத்தவசில் வீற்றிருக்கும் நீர்பூத்தத்திருமகள். மற்றாருத்தி நீ படைத்த மண்ணுயிர்கள் யாவுக்கும் மனமிரங்கியருள் சுரக்கும் மண மங்கை. அதாவது நிலமகள். ஆனால் அவர்களில் ஒருத்தியாகிய திருமகளை உனது திருத்துழாய்த் தாரார்ந்த தடமார்பிலே இடம் கொடுத்து வைத்திருக்கிறாய். அவளைவிட்டு நீ பிரியாய். உன்னை விட்டு அவள் பிரியாள். உன்மைதான். ஆயினும் நீ வஞ்சகன் உன் வஞ்சனை மாயை மட்டும் அந்தத் திருமகள் அறிய நேர்ந்தால் உன்னைக் கோபிக்கமாட்டாளா? நிச்சயமாகக் கோபிக்கத்தான் செய்வாள்.
நீ அவ்வாறு செய்யும் மாயை என்னவென்று கேட்கிறாயா? சொல்கிறேன் கேள். நிலமகள்மேல் கொண்டிருக்கும் நிறைந்த காதலால் அவளை நீ அரவாகி- ஆதிசேடனாகி- உன் தலையாலேயே சுமக்கிறாய். முன்பொருகால் இரணியாக்கன் என்ற தானவன் அந்நிலமகளைப் பாயாய்ச்சுருட்டி எடுத்துக்கோண்டு கடலுக்கடியில் மறைய, நீ ஏனமாய்- பன்றியாய் - உருவெடுத்து அவனைப் போரில் கொன்று அந்நிலமகளை- உன் ஆசைக்கினியாளை- உனது அழகான இரண்டு மருப்புகளில் ஏந்திக்கொண்டு மீண்டு வந்தாய். ஊழி முடிவில் ஒன்றுமறியாப்பாலகன் போல் ஓராலிலை மேல் தூங்காமற் தூங்கியபோது உன் உயிரனைய அந்நிலமகளை உன் வயிற்றுக்குள் வைத்துக்காப்பாற்றுகிறாய். அவ்வளவுதானா? வாமனனாய்த் தோன்றி வன்மத்தால் மாவலிமேல் மண்ணிரந்து நின் ஓரடியால் உன் உயிரனைய உலகாளை உனது ஓரடிக்குள் ஒளித்துக் கொள்கிறாய். இவ்வாறெல்லாம் நீ உன்னிருவரில் ஒருத்தியாகிய நிலமகளிடம் பல சந்தர்ப்பங்களில் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதைத் திருமகள் - உன் மணிமார்பில் என்றும் உறையும் - புண்டரிகை அறிந்தாளானால் அவளது மனம் புண்படாதா? அவள் உன்னிடம் சீறமாட்டாளா? என்று அவன் கேட்கிறான்.

அரவாகிச்சுமத்தியால் அணியெயிற்றிலேந்துதியால்
ஒருவாயில் விழுங்குதியால் ஓரடியால் ஒளித்தியால்
திருவாரும் நிலமகளை இஃதறிந்தாள் சீறாளோ
மருவாரும் துழாய் அலங்கல் மணிமார்பின் வைகுவான்

ஒரு பெண் தன் கணவன் மற்றொரு பெண்ணிடம் பற்றுக் கொண்டிருப்பதையறிய நேரிட்டால் பதற்றமுறுவாள் என்னும் கருத்தைக் கொண்டு பரம்பொருளாகிய இராமனைத் தோத்திரம் செய்யும் வகையில் விராதனின் ஐயப்பாடு அமைகிறது. விராதனா செல்கிறான் இல்லை.
கம்பமேதை சொல்கிறது.

Comments

Popular posts from this blog

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

“அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசே போல்” என்று மிக அற்புதமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் மாபெரும் இலக்கிய படைப்பாகிய இராமகாதையில் குறிப்பிடுகின்றான். ஆம். அவன் கூறியது முற்றும் உண்மைதான். அரன் தான் அகிலத்திலேயே சிறந்தவன் என்றோ அல்லது உலகத்தையே தன் ஈரடியால்  மூவடியாக அளந்து கொண்டானே அந்த அரிதான் பெரியவன் என்றோ நாம் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது தான் அவனது சிறந்த நோக்கமேயன்றி அவன் அரனையோ, அரியையோ இழித்துக் கூறுவதாக ஆகாது. கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட சரிதை திருமாலின் பிறப்பைப் பற்றி. அவன் வட மொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தனது இராம காதையை இயற்றியிருப்பினும் பலவிடங்களில் கதையிலும் சரி, கருத்திலும் சரி, வான்மீகியினின்றும் வேறுபடத்தான் செய்கிறான். மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும், சீதையும் ஒருவரையருவர் கண்டு காதல் கொண்ட பிறகே கடிமணம் புரிந்து கொண்டதாக நம் தமிழ் மரபிற்கேற்ப தன் கதையை மாற்றுகிறான். அதேபோல் வாலி வதைப்படலத்தில் இராமனை முழுமுதற் கடவுளென்பதை வாலி கண்டு கொண்டதாக முதல் நூலின் கருத்திற்கு ம

இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி

       “இராமகாதையில் ஒரு திருப்பமா?” என்று இந்த கட்டுரையின் தலைப்பைக் காணும் வாசகர்கள் அதிசயத்துடன் என்னைப் பார்த்து கேட்பது என் செவிகளில் விழத்தான் செய்கிறது. கவியாற்றல் படைத்த கம்பனது இராமகாதையில் அப்படிப்பட்ட திருப்பம் என்ன இருக்கிறது? என்றும் பலர் எண்ணலாம். அவர்களுக்கு இந்நூலை எழுத முற்பட்ட நான் விடையளிக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்பதை நன்கு உணராமலில்லை. ஆம். இராமகாதையில் பல திருப்பங்கள் இருப்பதை, நாம் அதை ஊன்றிக் கவனிக்குமளவில் அறிந்துகொள்ள இயலும். அவைகளுக்கு பல சான்றுகள் உள. அவைகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு கூர்ந்து நோக்குவோம். முதலாவதாக தசரத சக்கரவர்த்தியால் தீர்மானிக்கப்பட்டு மறுநாள் காலை நடக்கவிருந்த இராம பட்டாபிஷேகம் அதற்கு முதல் நாள் இரவே கூனியின் சூழ்ச்சியால் நிறைவேறாமல் நின்றுவிடுவதை ஒரு திருப்பம் என்றே கொள்ளலாம். தசரதனின் திட்டப்படி இராம பட்டாபிஷேகம் அன்று நடந்திருக்குமானால் இராமன்  காட்டிற்குச் செல்வதோ, அங்கு சானகியை பிரிய நேரிடுவதோ, அதன் நிமித்தம் இராவணனை அவனுடைய குலத்தோடு வேரறுப்பதோ நடந்திருக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு இடமில்லாமல் போயிருக

ஒருவயது குழந்தை....

ஒரு வயதுக் குழந்தை மானுடம் கலந்த பசிகள் போல, தந்தையின் தோள்களில் இருக்கமாய் பிணைப்பு அது ஒரு பேருந்துச் சந்திப்பு….. மனித உயிர்கள் எழுபதைத் தாண்டலாம்.. யாரும் அவர்களுக்காக எழுவதைக் காணவில்லை…. நின்ற நபர்களில் நானும் ஒன்று….. யாராவது மடியேந்திக் கொள்ளலாம் என்றாலும், எவர் மடியும் பிடிக்காத ஒரு தகப்பன் குழந்தை…. இதனினும் கொடுமை தாய்க்கு இடம் கிடைத்தும் தாய் மடி சேராத குழந்தை…… அந்தப் பிணைப்பு எனக்குப் பிடித்தது…… அறுபதைத் தாண்டிய ஒரு முதுமை, பிணைப்பை விடு.. நாளை உன் தோள்கள் தோல்விகளை ஏற்காது என்றது…. தோள்கள் தாங்க வேண்டியது தந்தையின் கடமை…. என் மகன் என் உதிரம் என்ற சுயநலம் வேணாமே….. அவன் உலகம் தாண்டும் உயரத்தை ஒதுங்கிக் கூட இரசிக்க்லாமே…. நாளைய தோல்விகளுக்காக இன்றைய வெற்றிகளை இழக்க இயலாது…. அந்தக் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்தேன்…. அந்தப் பிடிப்பில்தான் அவனது எதிர்காலம்….. பிடித்துப் பிடித்தால் எல்லாம் பிடிக்கும்…. நான் சுமந்த என் குழந்தை, கண்ணீராய் வெளிவந்தது…. இன்னமும் என் குழந்தை எனக்கு குழந்தையாய் இருப்பது அவன் என்னைப் பிடித்துப் பிடித்தது,,,,,, -